Friday, July 31, 2009

எப்பிடி இருந்த நீ இப்பிடி ஆயிட்டியே !!! (Updated)


ஒரு காலத்திலே ரஜினிக்கு போட்டியாக உன் படங்கள் வெளியாகிகொண்டு இருந்தன. சில சமயம் உன் படங்கள் வசூலில் ரஜினி படங்களை மிஞ்சவும் செய்தன.

ஆனால், தொன்னூறுகளில் இருந்து உன் படங்களால் ரஜினி படங்களின் ஆதிக்கத்தை தாக்கு பிடிக்க முடியவில்லை. இருப்பினும், அவ்வப்போது, "தேவர் மகன்" போன்று சில படங்கள் வசூலில் குறை வைக்காமல் பரிமளித்தன. "ஆளவந்தான்", "ஹே ராம்" போன்று ஒரு சில படங்களால் உன்னால் மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்க முடிந்தது - படம் வெளியாவதற்கு முன்னால். வெளியானபின்பு, அப்படங்கள் பப்படங்கள் ஆனது ஒரு தனிக்கதை.

"உலக நாயகன்" என்று உன்னை உன் ரசிகர்கள் (?) அழைத்தாலும், உண்மையில் உன் பெயரும், புகழும் எந்த அளவிற்கு உலகம் முழுக்க பரவி இருக்கிறது என்பதற்கு, நீ "பஞ்ச தந்திரம்" படத்திற்காக கனடா மற்றும் அமெரிக்க நாட்டிற்கு போனபொழுது உன் பெயரை பார்த்துவிட்டு அவர்கள் உன்னை விமான நிலையத்தில் வைத்து அலைக்கழித்ததே நல்ல சாட்சி. ஒவ்வொருவருக்கும் நீயே உன்னைப்பற்றி எடுத்து கூறியும், உன் பயோடேட்டாவை காட்டியும்கூட அங்குள்ள வெளிநாட்டவர் ஒருவருக்கும் உன்னை பற்றிதெரியாமல், கடைசியில் இந்திய வெளியுறவு அலுவலக அதிகாரிகள் நேரில் வந்து உன்னை மீட்டெடுக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட "உலகம் அறியா நாயகன்" நீ என்ற உண்மையை உலகம் அன்று உணர்ந்தது.

தமிழ் பட துறையில், மற்ற பட துறைகளை போலவே, மார்க்கெட் நிலவரம்தான் ஒரு நடிகரின் சம்பளத்தை நிர்ணயிக்கும் என்ற அடிப்படையில், உன்னுடைய மிக பெரிய வெற்றிப்படம் என்று சொல்லிக்கொள்ளும் "தசாவதாரம்" படம் வெளிவந்த பின்பும் கூட நீ சம்பள அடிபடையில் ரஜினி (Always Numero uno) மற்றும் அஜித் (Distant Second) இருவருக்கும் பிறகு தொலைவில் மூன்றாவதாகத்தான் (Very Distant Third) வர முடிந்திருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறதே, உன்னுடைய மார்கெட்டின் உண்மையான லட்சணம். சந்தை என்பது கருணை இல்லாதது. Market is merciless, isn't it?

இப்படியாகத்தானே, ஒரு காலத்தில் முதல் இடத்திற்கு ரஜினியுடன் போட்டியிட்ட நீ, படிப்படியாக கீழிறங்கி இப்போது விக்ரம் போன்ற நடிகர்களின் படங்களுடன் போட்டியிடுவதற்கே யோசிக்கும் நிலைக்கு தள்ளபட்டுவிட்டாயே என்பதை நினைத்தால் மிகவும் பாவமாக இருக்கிறது. இந்த செய்தி "ஹிந்து" பத்திரிகையில் இப்போது வெளி வந்திருக்கிறது. உன்னுடைய "உன்னை போல் ஒருவன்" திரைப்படம், விக்ரமின் "கந்தசாமி" திரைப்படத்துடன் மோதுவதற்கு பயந்துகொண்டு, செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

உன்னுடைய ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முதலில் உன்னுடைய ஐம்பதாண்டு கால திரை துறை வாழ்வினை குறிக்கும் விதமாக ஆகஸ்ட் பன்னிரண்டாம் தேதி வெளியிடுவதாக இருந்த உன்னுடைய "உன்னை போல் ஒருவன்" திரைப்படம், இப்போது உன்னிலும் மார்க்கெட் நிலவரத்தில் கீழாக இருக்கும் விக்ரம் போன்ற நடிகர்களின் திரைபடத்துடன்கூட மோதுவதற்கு ஏன் பயப்பட வேண்டும்? இது உணர்த்துவது என்னவென்றால் உனக்கே உன்னுடைய படத்தின்மேல் நம்பிக்கை இல்லை என்பதுதான். மேலும், "கந்தசாமி" படத்தின் தயாரிப்பாளரான "கலைப்புலி" தாணு, உன்னால் மிகவும் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட "ஆளவந்தான்" தயாரிப்பாளர் என்பதனால், உன்னுடைய படத்தை விசேஷமாக தோற்கடிக்க ஏதாவது செய்து உன்னை சரியாக பழிதீர்த்துக்கொண்டு விடுவாரோ என்றும் பயமோ?

எது எப்படி இருப்பினும், இந்த செய்தியை படித்தவுடன் எனக்கு தோன்றிய நினைப்புதான் "எப்பிடி இருந்த நீ இப்பிடி ஆயிட்டியே!".

கமல் ரசிகர்களை மேலும் வெறுப்பேற்றும் செய்தி:

இந்த வார்த்தையை சுட்டினால் 'கந்தசாமி' படமும், அதன் நாயகன் 'விக்ரமும்', மற்றும் அதன் தயாரிப்பாளர் 'கலைப்புலி' தாணுவும், கமலையும், அவர் ரசிகர்களையும் படுத்தும் பாடு உங்களுக்கு விளங்கும். கந்தசாமியின் ஆகஸ்ட் மாத வெளியீட்டால், கமலின் . போ. . வுக்கு (அதாங்க, உன்னை போல் ஒருவன் படம்) அடுத்த இரண்டு மாதங்களுக்கு தியேட்டர் கிடைக்காது போலிருக்கிறது. கந்தசாமி படம் மட்டும் வெற்றி அடைந்துவிட்டால், . போ. . தீபாவளிக்கு முன்பு ரிலீஸ் செய்யப்படுவது ரொம்ப கஷ்டம். பார்ப்போம். 'தசாவதாரம்' வெற்றிப்படம் என்று சொல்லப்பட்ட அதன் நாயகனின் அடுத்த படமே தியேட்டர் கிடைக்காமல் திண்டாடுவது என்பது அந்த 'நாயகனின்' மார்க்கெட் நிலவரத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

பின்குறிப்பு: இந்த பதிவை படிப்பவர்கள், கண்டிப்பாக பின்னூட்டங்களையும் (comments) படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.